Tamil Sports News

விராட் உருவத்தில் இம்ரான் கானை பார்க்கிறேன் – ரவி சாஸ்திரி

பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் கேப்டனாக விராட்- உம் இருக்கும் கூட்டணி தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் விராட் பற்றி பேட்டி அளித்த ரவிசாஸ்திரி, நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரை அருகாமையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விராட் ஒரு அடையாளம். அவரின் தலைமை வேண்டும். அவரைப்போல உழைக்க யாரும் இல்லை. பயிற்சி பெற வருவது, ஒழுக்கம், தியாகம், தனிப்பட்ட விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் அவருக்கு நிகரில்லை. இப்படி ஒரு கேப்டனை பெற்றது இந்தியாவின் அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். விராட் பல வழிகளில் எனக்கு இம்ரான் கானை நினைவுபடுத்துகிறார். அவர் தனது சொந்த வழியில் அணியை முன்னெடுத்து தலைமை தாங்குகிறார். நான் பார்த்ததில் விராட் பல மடங்கு முன்னேற்றம் அடைந்து விட்டார். அவர் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறார். உதாரணத்திற்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்றதை குறிப்பிடலாம் என்று கூறினார்.

முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இணையும் சகோதரர்கள் !

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட ஹர்திக் பாண்ட்யா தகுதி பெற்றுள்ளார். முன்னதாக க்ருணல் பாண்ட்யா விளையாடுவார் என்று அறியப்பட்ட நிலையில், இருவரும் இணையும் முதல் சர்வதேச போட்டியாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாண்ட்யா சகோதரர்கள் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஒரே அணியில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை – இரண்டாவது இடத்தில் இந்திய அணி!

ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடர்களில் அபாரமாக செயல்பட்டு வெற்றிகளை குவித்த இந்திய அணி, 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் 111 புள்ளிகளுடன் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.