“என் சாவிற்கு சென்னை மாநகர போலீஸ் தான் காரணம்” – ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை வாக்குமூலம்

Call Taxi driver Rajesh Suicide

“தன் சாவிற்கு சென்னை மாநகர போலீஸ் தான் காரணம்”

என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு ராஜேஷ் என்ற கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ்(25). காஞ்சிபுரம் மாவட்டம் கம்மவார்பாளையம் பகுதியில் தங்கி சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி மறைமலை நகர் -சிங்கப்பெருமாள் கோயில் ரயில்நிலையங்கள் இடையே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை தாம்பரம் ரயில்வே போலீஸார் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சனை காரணமாக ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் வழக்கை முடித்தனர்.

இந்த நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மிகுந்த மன உலைச்சலோடு ராஜேஷ் உருக்கமாக பேசி வெளியிட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ராஜேஷின் தற்கொலை வாக்குமூலம்!

அதில், “இன்று ( 25 ஆம் தேதி) காலை பெண் ஊழியர் ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு வழியில் இன்னொரு ஊழியரை ஏற்றிக்கொள்வதற்காக பாடி மேம்பாலம் அருகே சாலை ஓரத்தில் காத்திருந்தேன். அப்போது இரண்டு போலீசார் அங்கு வந்து “வண்டிய இங்க நிறுத்தாத எடுத்துட்டு போ” என்றனர். உடனே அவ்விடத்திலிருந்து கிளம்பி சற்று தொலைவில் ரோட்டின் ஓரமாக வண்டியை நிறுத்தினேன்.

அங்கும் என்னை பின் தொடர்ந்து வந்த அவ்விரண்டு போலீசாரும் காரில் பெண் ஒருவர் இருப்பதை கூட பொருட்படுத்தாது என்னை மிகவும் மோசமான வார்த்தைகளில் தரக்குறைவாக திட்டினர். அவர்களது காக்கி உடைக்கு மரியாதை குடுத்து நான் அமைதியாக இருந்தேன். ஆனால் அவர்கள் அதை காப்பாற்றிக்கொள்ளவில்லை. இதே போல நேற்று திருவொற்றியூரில் ஒரு ஓரமாக சர்வீஸ் ரோட்டில் காரில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தேன்.

அங்கு வந்த போலீசார் என் வண்டியை லாக் செய்து விட்டு 500 ரூபாய் கொடுத்தால் தான் லாக்கை எடுப்போம் என்றனர். பணத்தை கொடுத்துவிட்டு ரசீது கேட்டதற்கு “எங்களையே எதிர்த்து பேசறயா” என்று கூறி தரக்குறைவாக திட்டினர். எங்கு போனாலும் போலீசாரின் தொல்லை தாங்க முடியவில்லை. போலீசாக இருந்து கொண்டு நீங்கள் இப்படி எல்லாம் செய்யலாமா? நீங்கள் வைத்தது தான் சட்டம் என்பது போல நடந்து கொள்கிறீர்கள். அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.

என்னைப்போல் ஒரு ஒரு ஓட்டுனரும் தினமும் பல பிரச்சனைகளுக்கு நடுவில் சரியான தூக்கம் கூட இல்லாமல் வண்டி ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். தவறு செய்தால் பைன் போடுங்கள் ஆனால் தரக்குறைவாக பேசாதீர்கள். “என் சாவிற்கு சென்னை மாநகர போலீஸ் தான் காரணம். என் சாவோடு இது எல்லாம் முடிய வேண்டும்”. மேற்கொண்டு இது போன்று நிகழ்வுகள் நடந்தால் நீங்கள் அனைவரும் வேலையை விட்டு போய்விடுங்கள் மக்களே ஆட்சி செய்யட்டும்” என்று கூறியிருந்தார்.

ஆதாரங்கள் அழிப்பு !

ராஜேஷின் உடலை மீட்ட தாம்பரம் போலீசார் அவரின் உடைமைகளை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கும்போது ஒரு செல்போனை மட்டும் தாமதமாக கொடுத்துள்ளனர். அதிலிருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் எல்லாம் அழிக்கப்பட்டிருந்தன. அதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அந்த செல்போனை ரெக்கவர் செய்து பார்த்த போது “தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ராஜேஷ் வீடியோ வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்ததும்,கொலைக்கான உண்மை காரணத்தை மறைக்க தாம்பரம் போலீசார் அந்த வீடியோ ஆதாரத்தை அழித்ததும்” தெரிய வந்தது.

ராஜேஷ் தற்கொலை தொடர்பாக ஊடகங்களில் வந்த செய்தியை அடிப்படையாக வைத்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. நடந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ராஜேஷ் தற்கொலைக்கு காரணமான 2 போக்குவரத்து போலீஸாரை அடையாளம் காண தென் சென்னை இணைஆணையர் சி.மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையரும் உத்தரவிட்டுள்ளார்.

ராஜேஷ் தற்கொலைக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும், இனி இதுபோல நடக்காமல் தடுக்கவும், ராஜேஷ் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் திரண்டு திருமங்கலம் சிக்னல் மற்றும் போரூர் பகுதிகளில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். மாலையில் 150-க்கும் அதிகமான கால் டாக்ஸி ஓட்டுநர்கள் திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

மக்களை காப்பாற்ற வேண்டிய போலீசாரே இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு ஓட்டுநர் ஒருவரின் தற்கொலைக்கு காரணமாக இருந்தது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

“என் சாவிற்கு சென்னை மாநகர போலீஸ் தான் காரணம்” – ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை வாக்குமூலம்