OPS

மக்களவைத் தேர்தலில் தேமுதிகவிற்கு எந்தெந்த தொகுதிகள்?

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. மேலும் தேமுதிக பொருத்தவரை கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இம்முறை கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் மற்றும் சுதீஷ் கட்சி சார்பாக களமிறங்குவார்கள் எனவும் தெரிகிறது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் தேமுதிக அதிமுக கூட்டணி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக பாமக போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அவர்கள் வரிசையில் தேமுதிகவும் இணையும் என்ற தகவல் கடந்த மூன்று வாரங்களாக பேசப்பட்டு வந்த நிலையில் நேற்று தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தொகுதி பங்கீடுகளில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்கியுள்ளது அதிமுக தலைமை. மேலும் அவர்கள் கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி, போன்ற தொகுதிகளை கோரியுள்ளதாகவும் தெரிகிறது.

தூத்துக்குடி தொகுதியை கேட்கும் பாஜக

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஐந்து தொகுதிகளில் ஒரு தொகுதி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியாக இருக்கலாம் என ஏற்கனவே பேசப்பட்டு வந்த நிலையில் பாஜகவு தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் “தூத்துக்குடி தொகுதியை எங்களுக்குத் தர வேண்டும் என அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவர்கள் தரும் பட்சத்தில், கட்சி மேலிடம் சம்மதித்தால் நான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளேன் என தமிழிசை கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் இணையும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவதில் எந்த இழுபறியும் இல்லை எனவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் விரைவில் இணைவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தாகும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு அதிமுக தொகுதிகளை பங்கிட்டுக் கொடுத்துள்ளது. பாமகவுக்கு ஏழு தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் இன்னும் சில கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கியுள்ளது. தற்போது அதிமுக கைவசம் 25 தொகுதிகள் உள்ளன. மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வர இருப்பதால் அவர்களுக்கும் தொகுதிகளை பங்கிட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக உள்ளது. இந்நிலையில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு செய்வது குறித்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எந்தெந்ததொகுதிகளில் அதிமுக போட்டியிடலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதிமுக தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ்-ஈபிஎஸ்சிடம் சமர்ப்பித்தார் பொன்னையன்

மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் இறுதியில் நடைபெற உள்ளது இதனை கருத்தில் கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையை தயாரித்து உள்ளது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஒரு மாத காலமாக அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிமுக தேர்தல் அறிக்கையை தலைமை கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் சமர்ப்பித்தார். தேர்தல் அறிக்கையில் ஏதும் திருத்தம் செய்ய வேண்டுமானால் அதை சரி செய்து பின்னர் முறையாக மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம், என்ன பேசினார் மோடி?

இந்திய நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் இறுதியில் நடைபெறவுள்ளது. அதனை கருத்தில் கொண்டு அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. அந்த நிகழ்வில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஸ், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் உட்பட பல கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். தமிழகத்தில் திமுக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது எனவும் கூறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கூறித்தும் பேசினார்.

பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள்

  • தமிழகம் வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்றார்.
  • மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் எனவும் அறிவித்தார்.
  • இலங்கை கடற்படையிடம் சிக்கி கொண்ட 1900 மீனவர்களை மத்திய அரசு மீட்டு கொடுத்துள்ளதையும் கூறிப்பிட்டார்.
  • இது போன்ற விஷயங்களை குறிப்பிட்ட பிரதமர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அப்போது தனது வெறுப்புகளை வெளிப்படுத்த மாநில ஆட்சிகளை காங்கிரஸ் கட்சி கலைத்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மாநில அரசுகளின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் நாடு முன்னேற முடியாது என்றார். நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கை எடுத்துவருகிறது என்பது குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றார். எதிர்கட்சிகளின் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் என்னை சோர்வடைய செய்யாது என்றார். தமிழக மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் என கோரிக்கை விடுத்தார். நிறைவாக பேசிய பிரதமர் நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற வாசகத்துடன் தனது உரையை நிறைவு செய்தார்.

    மீண்டும் வருவாரா மோடி ?

    பிரதமர் மோடி பாஜக பொதுகூட்டங்களில் கலந்து கொள்ள மீண்டும் தமிழகம் வருவார் என்று பாஜக பிரதிநிதிகள் தகவல் சொல்கிறார்கள். இந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு மோடி மீண்டும் பிரதமராக வருவாரா என்ற கேள்விக்கான துள்ளியமான பதிலை மக்கள் மிக விரைவில் தெரிவிப்பார்கள்.

    மீண்டும் வருமா பாஜக அல்லது மீண்டு வருமா காங்கிரஸ், மக்களவை தேர்தலில் மக்களின் பதிலுக்காக காத்திருப்போம்.

    திமுக அணியில் தேமுதிகவுக்கு இடமில்லை, ஸ்டாலின் உறுதி

    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாரோடு கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் நீடித்து வருகிறது. அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எங்கள் அணியில் தேமுதிகவுக்கு இடமில்லை என திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மேலும் திமுக 20 தொகுதியில் போட்டியிடுவது உறுதி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியின் கதவுகள் மூடப்பட்டதால் மீண்டும் அதிமுகவோடு தேமுதிக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

    துரைமுருகன் வெளியில் சொன்னது தவறு, தம்பிதுரை கருத்து

    வருகின்ற மக்களவை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என முடிவு செய்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இடம்பெறும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டு வந்தது. ஆனால் தீடிரென நேற்று திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் தொலைபேசி வாயிலாக அழைத்து பேசியுள்ளார். இதனை பொது வெளியில் துரைமுருகன் கூறியது தவறு என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கண்டித்துள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசத்தான் செய்வார்கள் அதனை பொது வெளியில் சொல்வது சரியல்ல என்று அவர் கூறினார்.

    உங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் ? ஓபிஸ் கேள்வி

    அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்ட மாபெரும் மாநாடு நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதில் பேசிய தமிழக துணை முதல்வர் ஓபிஸ், எதிர்கட்சியினரை பார்த்து “உங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என உங்களால் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் கூட்டணி விஷயத்தில் அவர் என்ன செய்திருப்பாரோ, அவரது தீவிர விஸ்வாசியாகிய நாங்களும் அதனையே செய்துள்ளோம் என்றார்.

    சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் – மோடி அறிவிப்பு

    அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உட்பட பல கட்சித் தலைவர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். மேலும் பேசிய பிரதமர் தமிழகம் வந்து செல்லும் விமானங்களில் தகவல்கள் தமிழில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார், இறுதியில் “நாற்பதும் நமதே நாடும் நமதே” என கூறி உரையை நிறைவு செய்தார்.

    தேமுதிகவுக்கு சீட் இல்லை துரைமுருகன் தகவல்

    Lok Sabha 2019 Alliances: மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த வேளையில் திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக பொருளாளர் சுதீஷ் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது நாங்கள் திமுக கூட்டணிக்கு வந்தால் தொகுதிகள் வழங்க வாய்ப்புள்ளதா என்று வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த துரைமுருகன் எங்களிடம் கொடுப்பதற்கு சீட் இல்லை என பதிலளித்துள்ளார். தற்போது தேமுதிக அதிமுக அணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

    தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் தர அதிமுக தயார்

    Lok Sabha 2019 Alliances: மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி அமைவதில் தொடர் இழுபறி நீடித்துவருகிறது. இந்நிலையில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை தர அதிமுக முன்வந்துள்ளதாக தெரிகிறது. அந்த 4 தொகுதிகளை தேமுதிக ஏற்க மறுப்பதே இழுபறிக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. மேலும் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் தரவும் அதிமுக தயாராக உள்ளதாக தகவல்.

    இன்று அறிவிக்கப்படுகிறது தேமுதிக அதிமுக கூட்டணி

    DMDK: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் இடம்பெற்றுள்ளன. மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிச்சயம் இணையும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் நேற்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் தேமுதிக தலைமையகத்தில் நடைபெற்றது அதில் அதிமுகவோடு கூட்டணி வைப்பதற்கு கட்சி நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இன்று நிச்சயம் அதிமுக தேமுதிக கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது. தேமுதிகவிற்கு ஐந்து முதல் ஆறு தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கான வாய்ப்பிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தொகுதி பங்கீட்டில் திணறுகிறதா அதிமுக?

    AIADMK-DMDK: மக்களவை தேர்தலை கூட்டணியோடு சந்திக்கும் வகையில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து வருகிறது, இதுவரை அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம், என்.ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன, அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை அதிமுக அறிவித்து வருகிறது, பாஜகவுக்கு 7 தொகுதிகள், பாமகவுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகத்துக்கு 1 தொகுதி மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது, கூட்டணி கட்சிகளுக்கு போக தற்போது மீதம் 26 தொகுதிகள் அவர்கள் வசம் உள்ளன.

    நிர்பந்திக்கும் தேமுதிக

    அதிமுக கூட்டணியில் நிச்சயம் தேமுதிக இணையும் என பாஜக, அதிமுக கட்சி பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். அதிமுக சார்பாக துணை முதலமைச்சர் ஓபிஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர், இருப்பினும் தேமுதிக கூட்டணி உடன்பாடு எட்டப்பட வில்லை. இதற்கு தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவருவதே காரணம் என கூறப்படுகிறது. பாமகவுக்கு நிகரான தொகுதிகள் எங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என தேமுதிக நிர்பந்திப்பதாக தகவல்.

    சமரசம் செய்ய வேண்டிய நிலையில் அதிமுக

    தேமுதிக எங்கள் கூட்டணியில் சேர வேண்டும் என அதிமுகவும் பாஜவும் ஒருமித்த குரலை வெளிபடுத்துகிறது, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதே ஒரே வழி, தற்போது அதிமுக வசம் 26 தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில், தேமுதிகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க தயக்கம் காட்டுகிறது அதிமுக, ஒரு வேளை கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தால் சொந்த கட்சி தொண்டர்கள் சோர்வடைய வாய்ப்புள்ளதாகவும் அது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்பதே அதிமுகவின் கருத்து.

    6 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு?

    நிறைவாக தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 5 ஆம் தேதி மாலைக்குள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    மோடி தலைமையில் மாபெரும் மாநாடு!

    வருகின்ற மார்ச் 6 ஆம் தேதி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் சார்பாக மாபெரும் பொதுகூட்டம் நடைபெறுகிறது, அதில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார், மார்ச் 6 ஆம் தேதிக்கு முன் தேமுதிக இணைந்துவிட்டால் விஜயகாந்தும் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

    இந்த கூட்டணிக்கு மக்கள் எத்தணை தொகுதிகளை ஒதுக்குகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் தேடுகிறார்கள் அரசியல் கட்சி தலைவர்கள்.

    விஜயகாந்த்-ஓபிஸ் சந்திப்பு

    OPS-Vijayakanth: மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வந்தன, ஆனால் தேமுதிக-அதிமுக கூட்டணி சேருவதில் தொடர் இழுபறி நீடிக்கிறது, இந்நிலையில் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்க துணை முதலமைச்சர் ஓபிஸ் தேமுதிக தலைவரை நேரில் சந்தித்து பேசினார், இந்த சந்திப்பின் போது அமைச்சர் ஜெயகுமாரும் உடனிருந்தார். பின்னர் பேசிய ஓபிஸ், கூட்டணி குறித்து இன்றோ நாளையோ நல்ல செய்தி வரும் என்றார்.

    பிரிந்து சென்றவர்கள் இணைய வேண்டும் ஓபிஎஸ் அழைப்பு

    AIADMK: வருகின்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக, பாஜக, பாமக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது; அது ஒரு ரகசியம் – பன்னீர்செல்வம்

    நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தை பரம ரகசியம். “தேசிய கட்சிகள், மாநில கட்சிகளின் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். ஆனால் யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது; அது ஒரு ரகசியம். கூட்டணி தொடர்பான அறிவிப்பை அ தி மு க தலைமை கழக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து அறிவிப்போம்” என்று துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

    மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தரலாம்: அதிமுக அறிவிப்பு

    மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக
    போட்டியிட விருப்பமுள்ளவர்கள் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி பிப்ரவரி 4ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.