Duraimurugan

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா 18 தொகுதிக்கான இடைத்தேர்தல்?

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மக்களவை தேர்தல் தேதி மார்ச் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை காட்டிலும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தான். ஆம் இந்த தேர்தல் முடிவு ஆட்சியை மாற்றும் வல்லமை படைத்ததாக கருதப்படுகிறது.

சட்ட மன்றத்தில் அதிமுகவின் தற்போதைய பலம்

தமிழகத்தை பொருத்தவரை ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 234 சட்டமன்ற தொகுதிகளில் 118 சட்டமன்ற தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதிமுகவை பொருத்தவரை 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 136 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அதில் செல்வி ஜெயலலிதாவின் மறைவு, மதுரை ஏ.கே போஸின் மறைவு, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். அதுமட்டுமில்லாமல் 2018 ஆகஸ்ட் மாதம் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். அதனால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 பேரும் சபாநாயகர் தனபால் அவர்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு உயர்நீதிமன்றமும் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தது. இதனால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 115 ஆக குறைந்தது. அதிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகர். அவர் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்பட முடியாத சூழலில் 114 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் அதிமுக வசம் உள்ளனர். ஜெயலலிதாவின் மறைவையொட்டி நடைபெற்ற தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதால் அந்த தொகுதியும் கைநழுவி சென்றது.

அதிமுக வசம் உள்ள 114 சட்டமன்ற உறுப்பினர்களில் மூவர் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள். இவர்கள் அதிமுகவிற்கு ஆதரவு என கூறமுடியாது. அந்த மூவரில் கருணாஸ் டிடிவி தினகரனுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் தமிமுன் அன்சாரி திமுகவுக்கு அதரவு நிலைப்பாடு எடுத்துவிட்டார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மூவர் டிடிவி தினகரன் பக்கம் உள்ளதால் அதிமுகவின் தற்போதைய பலம் 108 இடங்கள் மட்டுமே.

திமுகவின் பலம்

திமுகவை பொருத்தவரை திரு.கருணாநிதியின் மறைவிற்கு பிறகு 88 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் திமுக ஆதரவு காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேர் உள்ள நிலையில் திமுக வசம் 96 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆட்சி மாற்றம் வருமா?

இந்த 21 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தபின்னர் அதிமுக வசம் 118 தொகுதிகள் இருந்தால் மட்டுமே அதிமுக ஆட்சியை தொடரமுடியும். வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகளின் முந்தைய தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பின்னர் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்துமுடிந்த பிறகு அதிமுக ஆட்சியை தொடர 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை.

8 தொகுதிகள்…

தமிழகத்தில் அதிமுக தனது ஆட்சியை தொடர வேண்டும் என்றால் வரும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 8 தொகுதியில் அதிமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் ஆட்சி கவிழ்வது உறுதி.

திமுக ஆட்சியமைக்க வாய்ப்பு?

இந்த தேர்தல் எந்த கட்சியாக இருந்தாலும் வெற்றி பெற 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை தற்போது திமுகவிடம் 96 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் திமுக 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆதரவு அளித்தால் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் 18 தொகுதி மக்களின் முடிவை ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆட்சியை தக்கவைக்குமா அதிமுக ? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மே 23 ஆம் தேதி பளிச் பதிலை தரவிருக்கிறார்கள். ஒரு வேளை இரு கட்சிகளாலும் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிருபிக்க முடியாவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஆறுமாதத்தில் தேர்தல் நடைபெறவும் வாய்ப்புள்ளது. ஆக மீண்டும் தொடங்குகிறது பிரேக்கிங் நியூஸ் கலாச்சாரம்.

சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி!

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வந்தடைந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளிடயே உரையாற்றவுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த்துவிட்டு, கன்னியாகுமரிக்கு பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கன்னியாகுமரியில் ராகுல் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் ஸ்டாலின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கு கொள்கின்றனர். இந்தக் கூட்டம் மாலை 3 மணிக்கு துவங்குகிறது, தமிழகம் முழுவதிலிருந்தும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் அங்கு செல்வார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

18 தொகுதிகளிலும் அதிமுக திமுக நேரடிப் போட்டி

அதிமுக ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் பதினெட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றால் திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே அதிமுக குறைந்தது பத்து இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. அதிமுகவும் திமுகவும் நேரடியாக களம் காண இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாத தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமையும்.

18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மீதமுள்ள மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது தேர்தல் நடத்த இயலாது எனவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இந்தத் தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் களமிறங்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூடி மக்களவை தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தியது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அந்த கட்சிக்கு வாய்ப்பு அளிக்காதது ஏமாற்றத்தை தருவதாகவும், இருப்பினும் வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாட்டின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிப்பதால் பாஜக மீண்டும் வெற்றி பெறக் கூடாது என்பதால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எங்கள் ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை இன்று அறிவிக்கிறார் ஸ்டாலின்

திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிவிப்பார் என கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 20 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்பது குறித்து இன்று பட்டியல் வெளியாகலாம் என தகவல் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் இணையும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவதில் எந்த இழுபறியும் இல்லை எனவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் விரைவில் இணைவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தாகும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

திமுக அணியில் தேமுதிகவுக்கு இடமில்லை, ஸ்டாலின் உறுதி

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாரோடு கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் நீடித்து வருகிறது. அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எங்கள் அணியில் தேமுதிகவுக்கு இடமில்லை என திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மேலும் திமுக 20 தொகுதியில் போட்டியிடுவது உறுதி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியின் கதவுகள் மூடப்பட்டதால் மீண்டும் அதிமுகவோடு தேமுதிக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

துரைமுருகன் வெளியில் சொன்னது தவறு, தம்பிதுரை கருத்து

வருகின்ற மக்களவை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என முடிவு செய்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இடம்பெறும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டு வந்தது. ஆனால் தீடிரென நேற்று திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் தொலைபேசி வாயிலாக அழைத்து பேசியுள்ளார். இதனை பொது வெளியில் துரைமுருகன் கூறியது தவறு என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கண்டித்துள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசத்தான் செய்வார்கள் அதனை பொது வெளியில் சொல்வது சரியல்ல என்று அவர் கூறினார்.

தேமுதிகவுக்கு சீட் இல்லை துரைமுருகன் தகவல்

Lok Sabha 2019 Alliances: மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த வேளையில் திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக பொருளாளர் சுதீஷ் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது நாங்கள் திமுக கூட்டணிக்கு வந்தால் தொகுதிகள் வழங்க வாய்ப்புள்ளதா என்று வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த துரைமுருகன் எங்களிடம் கொடுப்பதற்கு சீட் இல்லை என பதிலளித்துள்ளார். தற்போது தேமுதிக அதிமுக அணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.