AIADMK alliances

யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமைந்தது அந்த கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உட்பட சில கட்சிகள் இருக்கின்றன. யாருக்கு எந்த தொகுதிகள் என்பதை ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதிமுக தலைமையகம் வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக தொகுதிப் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா 18 தொகுதிக்கான இடைத்தேர்தல்?

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மக்களவை தேர்தல் தேதி மார்ச் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை காட்டிலும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தான். ஆம் இந்த தேர்தல் முடிவு ஆட்சியை மாற்றும் வல்லமை படைத்ததாக கருதப்படுகிறது.

சட்ட மன்றத்தில் அதிமுகவின் தற்போதைய பலம்

தமிழகத்தை பொருத்தவரை ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 234 சட்டமன்ற தொகுதிகளில் 118 சட்டமன்ற தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதிமுகவை பொருத்தவரை 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 136 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அதில் செல்வி ஜெயலலிதாவின் மறைவு, மதுரை ஏ.கே போஸின் மறைவு, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். அதுமட்டுமில்லாமல் 2018 ஆகஸ்ட் மாதம் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். அதனால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 பேரும் சபாநாயகர் தனபால் அவர்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு உயர்நீதிமன்றமும் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தது. இதனால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 115 ஆக குறைந்தது. அதிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகர். அவர் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்பட முடியாத சூழலில் 114 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் அதிமுக வசம் உள்ளனர். ஜெயலலிதாவின் மறைவையொட்டி நடைபெற்ற தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதால் அந்த தொகுதியும் கைநழுவி சென்றது.

அதிமுக வசம் உள்ள 114 சட்டமன்ற உறுப்பினர்களில் மூவர் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள். இவர்கள் அதிமுகவிற்கு ஆதரவு என கூறமுடியாது. அந்த மூவரில் கருணாஸ் டிடிவி தினகரனுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் தமிமுன் அன்சாரி திமுகவுக்கு அதரவு நிலைப்பாடு எடுத்துவிட்டார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மூவர் டிடிவி தினகரன் பக்கம் உள்ளதால் அதிமுகவின் தற்போதைய பலம் 108 இடங்கள் மட்டுமே.

திமுகவின் பலம்

திமுகவை பொருத்தவரை திரு.கருணாநிதியின் மறைவிற்கு பிறகு 88 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் திமுக ஆதரவு காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேர் உள்ள நிலையில் திமுக வசம் 96 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆட்சி மாற்றம் வருமா?

இந்த 21 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தபின்னர் அதிமுக வசம் 118 தொகுதிகள் இருந்தால் மட்டுமே அதிமுக ஆட்சியை தொடரமுடியும். வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகளின் முந்தைய தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பின்னர் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்துமுடிந்த பிறகு அதிமுக ஆட்சியை தொடர 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை.

8 தொகுதிகள்…

தமிழகத்தில் அதிமுக தனது ஆட்சியை தொடர வேண்டும் என்றால் வரும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 8 தொகுதியில் அதிமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் ஆட்சி கவிழ்வது உறுதி.

திமுக ஆட்சியமைக்க வாய்ப்பு?

இந்த தேர்தல் எந்த கட்சியாக இருந்தாலும் வெற்றி பெற 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை தற்போது திமுகவிடம் 96 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் திமுக 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆதரவு அளித்தால் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் 18 தொகுதி மக்களின் முடிவை ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆட்சியை தக்கவைக்குமா அதிமுக ? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மே 23 ஆம் தேதி பளிச் பதிலை தரவிருக்கிறார்கள். ஒரு வேளை இரு கட்சிகளாலும் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிருபிக்க முடியாவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஆறுமாதத்தில் தேர்தல் நடைபெறவும் வாய்ப்புள்ளது. ஆக மீண்டும் தொடங்குகிறது பிரேக்கிங் நியூஸ் கலாச்சாரம்.

இன்று அதிமுக தாமாக கூட்டணி அறிவிப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், உட்பட சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பு உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மேல் ஒப்பந்தம் கையெழுத்தாகி கூட்டணி உடன்பாடு எட்டப் படலாம் எனவும் தெரிகிறது.

சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம்

18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற அதிமுகவினர் நாளை விண்ணப்பிக்கலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர், மேலும் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நேர்காணல் நடைபெற்று வருகிறது. அது நிறைவு பெற்றவுடன் சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சிதம்பரம் தொகுதியில் பாமக விடுதலைச் சிறுத்தைகள் நேரடிப் போட்டி

மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட உள்ளது. அதே சமயம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது. சிதம்பரம் தொகுதியை பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நேரடியாக களம் காணும் என தெரிகிறது. இரு கட்சிகளுக்கும் இயல்பாகவே வார்த்தைப் போர் நடைபெறும் சூழலில் தற்போது நேரடியாக களம் காணுவதால் யார் வெற்றி பெறுவார் என்பதில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

18 தொகுதிகளிலும் அதிமுக திமுக நேரடிப் போட்டி

அதிமுக ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் பதினெட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றால் திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே அதிமுக குறைந்தது பத்து இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. அதிமுகவும் திமுகவும் நேரடியாக களம் காண இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாத தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமையும்.

18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மீதமுள்ள மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது தேர்தல் நடத்த இயலாது எனவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இந்தத் தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் களமிறங்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

நாளை சென்னை வருகிறார் மோடி

Modi In Chennai: மக்களவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளனர். இந்த கூட்டணியில் பாமகவும் உள்ளது. தேமுதிகவும் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வண்டலூர் அருகே நடைபெறும் மாபெரும் பொதுகூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். மேலும் முதல்வர், துணை முதல்வர், அன்புமணி ராமதாஸ், போன்ற தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு 1 தொகுதி

Elections 2019 அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு ஒரு தொகுதி -ஒதுக்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, மேலும் வருகின்ற 21வது சட்டமன்ற தேர்தலிலும் புதிய நீதி கட்சி அதிமுக ஆதரவு நிலைபாடு எடுக்கும் என தெரிகிறது. ஒதுக்கப்பட்டுள்ள 1 தொகுதியில் அக்கட்சியின் தலைவர் சண்முகம் போட்டியிடுவார் என தெரிகிறது.

புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி

Elections 2019 அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி என துணை முதல்வர் ஓபிஸ் அறிவித்துள்ளார். அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியே போட்டியிடுவார் என தெரிகிறது. இதுவரை 15 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுத்துள்ளது. மீதமுள்ள 25 தொகுதிகளில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எந்த தொகுதியிலும் போட்டியிட தயார், தமிழிசை பேச்சு

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 5 தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை பாஜக சார்பாக வானதி ஸ்ரீனிவாசன், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை, நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது. பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழிசை “எந்த தொகுதியாக இருந்தாலும் நான் போட்டியிட தயார்”, அது எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்” என்றார்.

எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி தமிழிசை பேச்சு

BJP AIADMK PMK alliance 2019: வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என தமிழிசை பேசியுள்ளார். எண்ணிக்கை பெரிதல்ல எண்ணம்தான் பெரிது எனவும் , 40 இடங்களிலும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் 6ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாகவும் , அப்போது கூட்டணி கட்சித் தலைவர்களும் அந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.

பாமக நிச்சயம் தோல்வியை சந்திக்கும் வன்னியர் சங்க தலைவர் பேட்டி

Elections 2019: அகில இந்திய வன்னியர் சங்கத்தலைவர் ஜெய ஹரி அன்புமணி ராமதாஸ் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது அனைவருக்கும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.அதிமுக பாமக பாஜக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திப்பது நிச்சயம் எனக் கூறியுள்ளார். இதன்மூலம் அன்புமணி ராமதாஸ் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதிமுக சின்னத்தில் போட்டியிட தயார் பாரிவேந்தர் அறிவிப்பு

Elections 2019: மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாரிவேந்தர் தற்போது பாஜக எங்களை அழைத்தால் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொண்டால் அதிமுகவின் சின்னத்திலும் நாங்கள் நிற்க தயார் என தெரிவித்துள்ளார். ஒருவேளை அந்தக் கூட்டணி சரிவராத பட்சத்தில் மூன்றாவது அணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.