சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு, ஒரு முழுப்பார்வை.

Mamata Banerjee Dharna

Saradha Chit Fund Scam Case: சாரதா சிட் பண்ட் முறைகேடு பற்றி கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சென்ற சி பி ஐ அதிகாரிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல பட்டது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ சி பி ஐ அதிகாரிகளின் செயலை கண்டித்தும் மத்தியில் ஆளும் பா ஜ க அரசை எதிர்த்தும் அங்கிருக்கும் மெட்ரோ சேனல் பகுதி அருகே நேற்று முன்தினம் முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ராஜீவ் குமாரும் அதில் பங்கேற்றார். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் அங்கு திரண்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் உட்பட நாடு முழுவதிலும் இருந்து பல கட்சி தலைவர்கள் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தவாறு உள்ளனர்.

சாரதா சிட் பண்ட் விவகாரம்:

கொல்கத்தாவை சேர்ந்த சுதீப்தா சென் என்பவரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் மேற்கு வங்கம் மட்டுமின்றி அசாம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில மக்கள் தங்களது பணத்தை டெபாசிட் செய்திருந்தனர். இந்த நிலையில், திடீரென்று 2013 ஆம் ஆண்டு சாரதா சிட் பண்ட் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.

பொது மக்களின் பணம் 30,000 கோடி வரை சுருட்டப்பட்டிருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டது. முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பெயரில் தலைமறைவு ஆகியிருந்த சுதீப்தா சென் கைது செய்யப்பட்டார்.

Saradha Chit Fund Scam Case: சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு

மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணைகளில், அரசியல் தலைவர்கள் பலருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சாரதா நிறுவன அதிபருக்கு பின்புலமாக திரிணாமுலின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் இருந்துள்ளனர். ராஜ்யசபாவின் திரிணாமுல் எம் பி ஜெய் போஸ், மம்தாவுக்கு விசுவாசமான முன்னாள் டிஜிபி ரஜத் மஜூம்தார், மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் மதன் மித்ரா என அடுத்தடுத்து மம்தா ஆட்சியின் முக்கியமான நபர்கள் சாரதா வலையில் சிக்கினர்.

இவர்கள் அனைவரும் சாரதா குழுமத்தின் ஆலோசகர்களாக, நிர்வாக உறுப்பினர்களாக, பங்குதாரர்களாக இருந்து பல விதங்களில் உதவி வந்துள்ளனர்.

யார் இந்த ராஜீவ் குமார்?

2014 ஆம் ஆண்டு சி பி ஐ-க்கு மாற்றப்படும் வரை இந்த முறைகேடு சார்ந்த வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் தான் ராஜீவ் குமார். தற்போது இவர் கொல்கத்தாவின் காவல் ஆணையராக இருந்து வருகிறார். சி பி ஐ விசாரணையில் இந்த வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.

முதல்வர் மம்தா பானர்ஜீக்கு நெருக்கமானவராக வர்ணிக்கப்படும் ராஜீவ் குமாருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்பட்ட சி பி ஐ அதிகாரிகள், அது பற்றி விசாரிக்க அவரை பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. பல முறை நேரில் வருமாறு அழைத்தும் அவர் நிராகரித்துவிட்டார். தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

Saradha Chit Fund Scam Case: சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு

இந்நிலையில்,அவரை நேரில் சென்று விசாரிப்பது என்று முடிவு செய்து சி பி ஐ அதிகாரிகள் 40 பேர்,கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று முன்தினம் மாலை சென்றனர். அப்பொழுது தான் சி பி ஐ அதிகாரிகளை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்காமல் போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து அனுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆணையர் ராஜீவ் குமாருக்கு ஆதரவாக பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவரை உலகத்தரம் வாய்ந்த அதிகாரி என பாராட்டியதோடு, தனது ஆட்சியை கெடுக்க பா ஜ க திட்டம் தீட்டுவதாகவும் சாடினார்.

இதை அடுத்து, “சாரதா சிட் பண்ட் முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி ராஜீவ் குமாருக்கு உத்தரவிடுமாறு” உச்ச நீதிமன்றத்தில் சி பி ஐ அதிகாரிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது .

அதே போல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேற்குவங்க மாநில அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சிட் பண்ட் விவகாரத்தில் மேற்குவங்க மாநில போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்” அனுப்ப உயர்நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளது. அனால் அதை சி பி ஐ மீறி நடந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரித்து “சி பி ஐ-க்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டது.

Saradha Chit Fund Scandal: சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு

நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இரண்டு நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இன்று காலை சி பி ஐ தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங்கில் உள்ள சி பி ஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணைக்கு தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று ஒருபோதும் நாங்கள் கூறவில்லை; அரசியல் ரீதியாக சிபிஐ பயன்படுத்தப்படுவதையே எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.

Saradha Chit Fund Case: சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு